ஆப்நகரம்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதனை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Samayam Tamil 15 May 2020, 3:15 pm
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வருகிற மே 17ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Samayam Tamil உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்


தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ்2 தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்றது. 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

இதனிடையே, பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

பத்தாம் வகுப்பு தேர்வு யாருக்கு? மாணவர்களுக்கா, அரசுக்கா?

இதையடுத்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான மறு தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அதில், தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இல்லை என்ற நிலையில் வரும் வரை மாணவர்களின் நலனை கருதி பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

தேர்வின்றித் தேர்ச்சி சாத்தியமா? 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும்... சில கடந்தகால சம்பவங்களும்

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த பொது நல மனுவை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பியது. அதேசமயம், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா வாபஸ் பெற்றார். இதையடுத்து, வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அடுத்த செய்தி