ஆப்நகரம்

ஆருத்ரா கோல்டு வழக்கு: கைதுக்கு இடைக்காலத் தடை!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 25 Jun 2022, 4:23 pm
பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்


சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

அவ்வாறு வசூலித்த பணத்தை டிபாசிட் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
கெத்தாக வலம் வர போறீங்க: ஸ்டாலின் கலகல!
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி வருவதாகவும், வழக்குப்பதிவு செய்த பின்னர் வங்கி கணக்குகள் முடக்கபட்டுவிட்டதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர இயவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப தர தயாராக இருப்பதால், முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், பணத்தை திருப்பி தருவார்கள் என்ற உத்தரவத்தை நம்ப முடியாது எனவும், முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவித்தால் பணத்துடன் தப்பிசெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற கூடாது எனவும், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

காவல்துறை விசாரணை முடியும் வரை மேற்கொண்டு யாரிடமும் டெபாசிட் மேற்கொள்ள கூடாது என ஆருத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, டெபாசிட் தாரர்களுக்கு பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக உள்துறை செயலாளருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரியையும் நியமித்துள்ளார். மேலும், பணத்தை திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை வாரந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அடுத்த செய்தி