ஆப்நகரம்

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

மதுரை: சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 19 Dec 2018, 12:20 am
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் மகள்(12) இருக்கிறாள். அவரை அதே பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்த முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Girl Rape


இதற்கிடையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததை யாரும் அறிந்து கொள்ளவில்லை. கடந்த அக்டோபர் மாத இறுதியில் தான், விஷயம் வெளியே தெரிந்துள்ளது. உடனே அக்டோபர் 31ஆம் தேதி மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு கருவை கலைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் கரு 20 வாரங்களைக் கடந்து விட்டதால், அதனைக் கலைக்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் சிறுமியின் பெற்றோர் கடந்த நவம்பர் 23ல் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் நீதிபதிகள் ஆர் சுப்பையா, பி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்விற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற அமர்வின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ அறிக்கையை டிசம்பர் 11ஆம் தேதி அரசு மருத்துவமனை டீன் தாக்கல் செய்தார். அதில், கரு 30 வாரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் அதைக் கலைக்க முடியாது.

அவ்வாறு கருக்கலைப்பு செய்தால் சிறுமியின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 12 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டது.

மேலும் சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்த பின், அதனை வளர்க்கும் சூழலில் தாய் இல்லாததால், குழந்தையை தத்து கொடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி