ஆப்நகரம்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு செல்லாது - உயர்நீதிமன்றம்!

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 1:42 pm
சென்னை: தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Maran Brothers


கடந்த 2004 - 2007 காலக்கட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அப்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் தொலைக்கட்சிக்கு பி.எஸ்.என்.எல் அதிவேக தொலைபேசி இணைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சகோதரரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் இன்று நடைபெற்ற விசாரணையில் 7 பேரை விடுவித்த, சிபிஐ நீதிமன்ற உத்தரவு தவறானது என்று கூறி, அதனை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

சிபிஐ தரப்பு வாதத்தை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் சிபிஐ மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்ற கலாநிதி மாறன் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தார்.

சம்பந்தப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தை அணுகி, வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல், 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து, சாட்சி விசாரணையை தொடங்க ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Madras HC sets aside court order discharging Maran brothers from illegal telephone exchange case.

அடுத்த செய்தி