ஆப்நகரம்

IAS அதிகாரிகள் I Am Safe என்பது போல் செயல்படுகிறார்கள்: உயர்நீதிமன்றம் அதிருப்தி

உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள்: உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Sep 2018, 12:53 pm
உள்ளாட்சித் தேர்தல் நடத்த விருப்பம் இல்லை என்றால் உடனே சொல்லிவிடுங்கள் என்று தமிழக அரசின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
Samayam Tamil chennai high court


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2017ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வார்டு வரையறை எல்லை பணிகள் நிறைவடையாத காரணத்தினால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியவில்லை என்று தமிழக அரசு கூறி வந்தது. இதனிடையே நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத தமிழக அரசுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர்கள் ஆகியோர் தரப்பில் இருந்து பதில் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை செய்வதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்ததையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் இந்த கருத்து கூறப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும், மனுவை திருத்தம் செய்யும்படியும் அறிவுறுத்தினர்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தாமதிப்பதை குறிப்பிட்ட நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் நடத்த விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடுங்கள் என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் IAS அதிகாரிகள் I Am Safe என்பது போல் செயல்படுவதாகவும் கடிந்து கொண்டனர்.

பின்னர், வார்டு வரையறை தொடர்பான பணிகள் முடித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தாகவும், அது பற்றிய விவரங்களை அறிக்கையாகதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி