ஆப்நகரம்

நிவர் புயல் எதிரொலி: உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை... வங்கிகள் இயங்காது!

நிவர் புயல் எதிரொலியாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 24 Nov 2020, 11:32 pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகரில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுதவிர டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மாலையில் புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த புயல் இரவு 9 மணிக்கு 320 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்தது. சென்னையில் இருந்து 410 கி.மீ தொலைவில் உள்ளது நிவர் புயல். அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் தீவிர புயலாக மாறி அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து மக்கள் வேறு இடங்களுக்குப் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிவர் புயல்: தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு!

இதனிடையே, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுவிடுமுறை அறிவித்ததை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெட்ரோல் பங்குகள், பால் வினியோகம் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் அறிவிப்பு


இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வங்கிகள் நாளை செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி