ஆப்நகரம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்!

சென்னை: உயர்நீதிமன்றத்திற்கு பி.புகழேந்தி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

TIMESOFINDIA.COM 17 Nov 2018, 9:54 pm
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் 59 நீதிபதிகளே இருந்தனர். இந்நிலையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி, உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Judge


இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இதற்கான நியமன உத்தரவிற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே புகழேந்தியின் பெயர் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் கடந்த 5 மாதங்களாக நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்துள்ளது. இவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி, 7 நீதிபதிகளுடன் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது புகழேந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி வரை, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 63 பேர் இருந்தனர்.

ஆனால் கடந்த ஒரு வாரத்தில் 3 நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதி ரமேஷ் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கும், சத்ருகானா புஜாஹரி ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். மூன்றாவது நீதிபதி எஸ்.பாஸ்கரன் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி