ஆப்நகரம்

வாரிசு சான்றிதழ் விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுக்கும் முக்கிய முடிவு!

இரண்டாம் நிலை வாரிசுதாரர்களுக்கான சான்றிதழை வழங்கும்படி தாசில்தார்களுக்கு உத்தரவிடுவது சரிதானா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு ஆராய வேண்டுமென தனி நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

Samayam Tamil 22 Jan 2022, 9:57 pm
இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ் கோரி அளித்த விண்ணப்பங்களை நிராகரித்த சம்பந்தப்பட்ட தாசில்தார்களின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி வெங்கடாசலம் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
Samayam Tamil Madras High court


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ்களை தாசில்தார் வழங்க வேண்டும் என்றும், தாசில்தாருக்கு அதிகாரமில்லை என்றும் இரு வெவ்வேறு அமர்வுகள் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து வாரிசுரிமை சட்டப்படி, இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள், தங்கள் அடையாளத்தை நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினால், அது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடுவதுடன், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி!
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக இரண்டாம் நிலை வாரிசுதாரர்களை அடையாளம் காணும் விவகாரத்தை தாசில்தாரிடம் ஒப்படைக்கலாமா, வாரிசுரிமை சட்டப்படி வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடும் நடைமுறைக்கு மாற்றாக, புதிய நடைமுறையை உயர் நீதிமன்றம் உருவாக்க முடியுமா, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை ஒதுக்கிவிட்டு, இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்று வழங்க உத்தரவிடுவது சரிதானா என்பது குறித்து விரிவாக ஆராய முழு அமர்வு அமைக்கும்படி தலைமை நீதிபதிக்கு, நீதிபதி தண்டபாணி பரிந்துரைத்துள்ளார்.

அடுத்த செய்தி