ஆப்நகரம்

லோக் ஆயுக்தாவின் தலைவர் நியமிக்கப்பட்ட விவகாரம்: வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

லோக் ஆயுக்தாவின் தலைவராக நீதிபதி தேவதாஸ், உறுப்பினராக ஜெயபாலன் ஆகியோரின் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Samayam Tamil 26 Apr 2019, 11:18 pm
லோக் ஆயுக்தாவின் தலைவராக நீதிபதி தேவதாஸ், உறுப்பினராக ஜெயபாலன் ஆகியோரின் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், தமிழக ஆளுநரின் செயலர், தமிழக பொது மற்றும் நி்ர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர், நீதிபதி பி.தேவதாஸ், கே.ஜெயபாலன் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil லோக் ஆயுக்தாவின் தலைவர் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
லோக் ஆயுக்தாவின் தலைவர் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு


கரூர் வெங்கமேடு பதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ், நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக, மாவட்ட நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்ற ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறை சாரா உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம், வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களாக 25 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்பு, பொது நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு சட்டத்தில் அனுபவம் உள்ளவர்களையே நியமனம் செய்ய வேண்டும். அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், ஆதாயம் தரும் பதவியில் இருப்பவர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்வுக்குழு, தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமார், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பதேவதாஸ் ஆகியோர் பெயர்களை பரிந்துரை செய்தது.
இவர்களில் பால் வசந்த குமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 10 ஆண்டுகள், தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணிபுரிந்துள்ளார். நீதிபதி பி.தேவதாஸ், 6 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக மட்டும் பணிபுரிந்துள்ளார்.

நீதித்துறை அனுபவத்தின் அடிப்படையில் பால்வசந்தகுமாரை தான் லோக் ஆயுக்தா தலைவராக நியமனம் செய்திருக்க வேண்டும். ஆனால் தேவதாஸின் உறவினர் ஒருவர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காக தேவதாஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.ஜெயபாலனுக்கு, விதிப்படி 25 ஆண்டு சட்ட அனுபவம் கிடையாது. இதனால் நீதிபதி தேவதாஸ், ஜெயபாலன் ஆகியோரின் நிமனத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்களின் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்"
என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, மனு தொடர்பாக தமிழக ஆளுனரின் செயலர், தமிழக பொது மற்றும் நி்ர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர், நீதிபதி பி.தேவதாஸ், கே.ஜெயபாலன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி