ஆப்நகரம்

புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக் கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி!

ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை நேர் செய்யப்படும் வரை, புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 11 Apr 2019, 7:38 pm
தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் மறுத்ததை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த தனி நீதிபதி, ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
Samayam Tamil Madurai High Court.


அதில், மனுதாரர் பணிபுரியும் பள்ளியில் ஏற்கனவே உபரியாக ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் மனுதாரர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது பணி நியமனத்தை அங்கீகரிக்கவில்லை எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி ஆர்சி டயோசிஸ் பள்ளிகளில் 116 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் உட்பட அரசு பள்ளிகளில் 1,079 உபரி ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5,200 உபரி ஆசிரியர்களும், இவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.37 கோடியும், ஆண்டுக்கு ரூ.444 கோடியும் வழங்கப்படுவதும் தெரியவந்தது.

பொதுவாக ஆசிரியர்கள் உபரியாக இருந்தால் புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது. ஆனால் இதற்கு நேர் மாறாக உபரி ஆசிரியர்கள் இருக்கும் பல பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் நியமனத்தை அங்கீகரிக்கக் கோருவது தொடர்பாக ஏராளமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அரசு உதவி பெறும் சிறுபான்மையில்லா மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நலன் மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க, சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது.

* அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.

* ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை நேர் செய்யப்படும் வரை, புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது.

* உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை நேர் செய்வதற்காக, தங்களது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பிற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி