ஆப்நகரம்

உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடரலாமா? வேண்டாமா? - உயர்நீதிமன்றம் உத்தரவு!

50 சதவீதத்துக்கு மேல் முடிந்திருந்தால் திட்டப் பணியை தொடரவும், 50 சதவீதத்துக்கும் குறைவாக பணிகள் நடைபெற்றிருந்தால் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2019, 10:09 pm
கரூர் அரவக்குறிச்சி கோடந்தூரைச் சேர்ந்த பழனி்ச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், திருப்பூர் மாவட்டம் புதிய புகழூரில் இருந்து பழைய புகழூர் (பரமத்தி) வரையும், புதிய புகழூரில் இருந்து திருவலம் வரையும் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.
Samayam Tamil Madurai High Court.


விளை நிலங்கள் வழியே உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு முன்பு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு எந்த அனுமதியும் பெறவில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட இடங்களில் உயர் அழுத்த மின் வழிப்பாதை அமைக்க மத்திய மின் தொகுப்பு கழகம் மற்றும் தமிழக மின்வாரியத்துக்கு மத்திய மின்வாரிய ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இரு வழித்தடத்திலும் 50 சதவீதத்துக்கு மேல் திட்டப்பணிகள் முடிந்திருந்தால் திட்டப்பணியை தொடரலாம். 50 சதவீதத்துக்கும் குறைவாக பணிகள் நடைபெற்றிருந்தால் திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

உயர் மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாற்று வழியில் திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகளும், மத்திய மின் தொகுப்பு கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி