ஆப்நகரம்

தமிழகக் கோவில்களில் காலியாகவுள்ள இரவு காவலர் பணி; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பவும், அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 8 May 2019, 2:50 pm
தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உத்தமபாளையம் அருள்மிகு கருப்பசாமி திருக்கோயில், அனுமந்தன்பட்டி அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில், கம்பம் அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் மற்றும் ஓடைப்பட்டி காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil Madurai High Court.


கடந்த 3ஆம் தேதி ராயப்பன்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூதநாராயணர் திருக்கோவிலில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த 70 வயது முதியவர் மலையன் என்பவரை கொலை செய்துவிட்டு, 60 வயது முதியவர் சுப்பிரமணியம் என்பவரை தாக்கி உள்ளனர்.

இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், கோவில் சொத்துக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பவும், அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணிக்கு முறையாக வருவதை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

மேலும் திருட்டு சம்பவங்கள் குறித்து முறையாக விசாரிக்காத காவல்துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து உரிய பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி