ஆப்நகரம்

தேனி ஆயுதப்படை காவலர் பணிநீக்க விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் சேர்த்து பணித் தொடர்ச்சி, பணப்பலன்கள் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை தலைவர், திண்டுக்கல் டிஐஜி, தேனி எஸ்பி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 29 Apr 2019, 4:22 pm
தேனி ஆயுதப்படை காவலராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கணேஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தேனி ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தேன். ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சீனிவாசன் என்னை வீட்டு வேலைக்காரரர் போல் நடத்தினார். சாதி ரீதியாக எனக்கு பல்வேறு தொல்லைகள் அளித்தார். இது தொடர்பாக தேனி எஸ்பியிடம் புகார் அளித்தேன். எஸ்பியும் எனக்கு பல்வேறு தொல்லைகள் அளித்தார்.
Samayam Tamil Madurai High Court.


இந்த சூழலில் என்னை ராமநாதபுரத்துக்கு இடமாறுதல் செய்து 2018ஆம் ஆண்டு தேனி எஸ்பி உத்தரவிட்டார். தேனி எஸ்பி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளித்தேன். டிஜிபியும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னைப் போலவே ஆயுதப்படை காவலர் ரகுவுக்கும் தேனி எஸ்பியும், ஆயுதப்படை ஆய்வாளரும் பல்வேறு தொல்லைகள் அளித்தனர்.

இதனால் தேனி எஸ்பி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நானும், ரகுவும் டிஜிபி அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றோம். இந்த சம்பவத்தால் எங்களை பணியிடை நீக்கம் செய்து தேனி எஸ்பி 22.3.2018-ல் உத்தரவிட்டார். இடமாறுதல், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தேனி எஸ்பி எனக்கு 8.4.2018-ல் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார். அதுதொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தாமல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் என்னை பணி நீக்கம் செய்து 15.10.2018-ல் எஸ்பி உத்தரவிட்டார். எனவே என்னை பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என்னை மீண்டும் பணியில் சேர்த்து பணித் தொடர்ச்சி, பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர், திண்டுக்கல் டிஐஜி, தேனி எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி