ஆப்நகரம்

மனைவியை அரிவாளால் வெட்டி தீ வைக்க முயற்சித்த கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

வரதட்சணை கொடுமையால் மனைவியை கொல்ல முயற்சித்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு

Samayam Tamil 10 Oct 2018, 11:19 am
திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவி, குழந்தையுடன் சேர்த்து கொலை செய்ய முயற்சித்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil tiruvarur-wife-threatens-to-kill-by-husband
ஜெயநந்தினி, கணவனால் தாக்கப்பட்டவர்


திருவாரூர் வாசன் தெருவை சேர்ந்த கிஷோர் ராஜாவுக்கு, ஜெயநந்தினி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மனைவி ஜெயநந்தினியை கொடுமைப்படுத்தி வரதட்சணை கேட்பதை கிஷோர் வழக்கமாக செய்து வந்துள்ளார்.

இதனால் தம்பதிகளுக்கிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று, வழக்கம் போல மனைவியிடம் கிஷோர் தனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து ரூ. 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஆனால் ஜெயநந்தினியிடம் அவ்வளவு பணம் இல்லாததால், கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் அரிவாளால் அவரை வெட்டியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர், ஜெயநந்தினியை குழந்தையுடன் வைத்து மண்ணெணெய் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர்.

இதில் குழந்தையுடன் தப்பிப்பிழைத்த ஜெயநந்தினி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு, வெட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த திருவாரூர் போலீசார் ஜெயநந்தினி அளித்த புகாரின் மேல், சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

மேலும், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் கணவர் கிஷோர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டது தெரியவந்து. தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி