ஆப்நகரம்

முள்ளிவாய்க்கால் சம்பவம்: மதிமுக தலைமையில் நாளை இலங்கை தூதரகம் முற்றுகை

இலங்கைத் தீவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதை கண்டித்து மதிமுக, விசிக கட்சிகள் நாளை முற்றுகை போராட்டம்

Samayam Tamil 10 Jan 2021, 6:42 pm
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ள சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சிங்கள அரசை கண்டித்து வரும் 11 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மதிமுக அறிவித்தது.
Samayam Tamil tirumavalavan twitter image


அது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், '' இலங்கைத் தீவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் ராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்'' என கூறியிருந்தார்.

'தெருவுக்கு தெரு பாஜக கொடிதாங்க, எவரையும் எதிர்த்து போட்டியிட தயார்' - குஷ்பூ பளிச்

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை' இடித்துத் தள்ளிய சிங்கள இனவெறி அரசின் தமிழர் விரோத ஆணவப் போக்கைக் கண்டித்து மதிமுக ஒருங்கிணைப்பில் நாளை (11-01-2021) சென்னையில் நடைபெறும் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்போம்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி