ஆப்நகரம்

பக்கத்து வீட்டில் யூரின் போனவருக்கு எய்ம்ஸ் பதவியா? வைகோ காட்டம்!

மதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 28 Oct 2020, 11:43 pm

மதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டுமென வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil சுப்பையா சண்முகம் - வைகோ


இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நடுவண் அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

இவர் கார் நிறுத்த இடப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டுச் சுவரில் மூத்திரம் பெய்து அடாவடி செய்ததாக சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியாகின. 62 வயதுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக, இவர் மீது காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பெண்ணினத்தையே அவமதித்த சுப்பையா சண்முகத்திற்கு பதவி: கொந்தளித்த ஸ்டாலின்!

இவ்வாறு பண்பாடு அற்ற முறையில் நடந்துகொண்ட இவரை இயக்குநர் குழுவில் இடம் பெறச் செய்து இருப்பது எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கின்ற செயல் ஆகும்.

இவர் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்; பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல் நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும் சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு வந்து திணித்து வருகின்றது.

அவர்களும் முடிந்த அளவுக்கு அந்த அமைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றார்கள். மதுரை எய்ம்ஸ் இயக்குநர்கள் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி