ஆப்நகரம்

மருத்துவ நுழைவு தேர்வு விவகாரம்: பிரதமருக்கு ஜெ., கடிதம்

மாணவர்கள் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு கொண்டு வரும் விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

TNN 9 Mar 2016, 5:28 pm
சென்னை: மாணவர்கள் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு கொண்டு வரும் விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil medical entrance exam issue jaya wrote letter to pm modi
மருத்துவ நுழைவு தேர்வு விவகாரம்: பிரதமருக்கு ஜெ., கடிதம்


இதுகுறித்த கடித்தத்தில் ஜெயலலிதா கூறியதாவது: மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டால் அது மாநில அரசின் உரிமையை பாதிக்கும். மருத்துவ கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்கும் உரிமை மற்றும் கொள்கைகளையும் பாதிக்கும்.

இந்த விவகாரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு தேசிய தகுதி நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தும் அறிவிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் தமிழக அரசு எழுப்பிய அனைத்து ஆட்சேபணைகளையும் உச்ச நீதிமன்றம் தனது தீர்பின் மூலம் ஏற்றுக்கொண்டது.

ஆனால் தீர்ப்பை பின்பற்றுவதற்கு பதிலாக அப்போதைய மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இதையடுத்து அந்த மறுஆய்வு மனுவை வாபஸ் பெறுமாறு கோரி 28-7-2013 அன்று அன்றைய பிரதமருக்கு மீண்டும் நான் கடிதம் எழுதினேன்.

ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த கருத்துருவின் அடிப்படையில் இந்த நுழைவு தேர்வை கொண்டு வருவது குறித்து இதர அமைச்சகங்களின் கருத்துகளை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கோரியுள்ளது என்று தற்போது வெளியாகும் தகவல் எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் மனதில் இது விரக்தியையும், குழப்பத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே தேசிய தகுதி நுழைவு தேர்வு கொண்டு வரப்பட்டால் அது அரசின் முன்னேற்றமான கொள்கைகளை அமல்படுத்துவதை பாதிக்கும். அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். மத்திய அரசு ஏற்கனவே ஒரு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. அது இன்னமும் நிலுவையில் தான் உள்ளது. இப்படி இருக்க தேசிய நுழைவு தேர்வை கொண்டு வரும் எந்த முயற்சியும் அல்லது திட்டமும் முறையானதாக இருக்காது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் எந்த முயற்சிகளையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். தேசிய நுழைவு தேர்வை கொண்டு வர எந்தவகையிலும் முயற்சி செய்யக்கூடாது. அவ்வாறு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது மாநில அரசின் உரிமைகளையும், மாணவர்கள் சேர்க்கை கொள்கைகளையும் பாதிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி