ஆப்நகரம்

கொரோனா வைரஸுக்கு மருந்து தயார்... கலெக்டர்ட்ட தான் காட்டுவேன்; அடம் பிடித்த முதியவர்

கொரோனா வைரஸிற்கு மருந்தை தயாரித்து அதனை மஞ்சப்பையில் வைத்து கொண்டு வந்திருப்பதாக தெரிவித்த மாணிக்கம், அந்த மருந்தை ஆட்சியரிடம்தான் காட்டுவேன் என கூறியுள்ளார்

Samayam Tamil 17 Feb 2020, 6:10 pm
ராமேஸ்வரம்: கொரோனா வைரஸிற்கு மருந்து தயாராக உள்ளதாகவும், அதனை மாவட்ட ஆட்சியரிடம்தான் காட்டுவேன் என அடம் பிடித்த முதியவரால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil மாணிக்கம்
மாணிக்கம்


உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் கொத்துக்கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தங்களது நாட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் உலக நாடுகளே விழி பிதுங்கியுள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக அளவில் மருத்துவ வல்லுனர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டறிந்திருப்பதாகவும், அதனை உடனே உலக நாடுகள் பயன்பெறும் வகையில், வல்லுநர்களுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கொரோனா வைரஸ்: தூத்துக்குடிக்கு வந்த கப்பலால் பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு கையில் ஒரு மஞ்சள் பையுடன் வேக வேகமாக வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி விவரம் கேட்டபோது அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. அதற்கு காரணம் அவர் சொன்ன விஷயம்தான்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலை என்ன? மத்திய அரசு தகவல்

இதுகுறித்து மாணிக்கம் கூறும்போது, நேற்று முன்தினம் தான் உறங்கிக் கொண்டிருந்த போது பொள்ளாச்சி மாசானியம்மன் தன்னுடைய கனவில் வந்து உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முறையை தனக்கு கூறியதாகவும், அதனை உலக மக்கள் பயன் பெரும் வகையில் இலவசமாக வழங்க உடனே நடவடிக்கை எடுக்குமாறு தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் தற்போது அதற்கான மருந்தை தயாரித்து அதனை மஞ்சப்பையில் வைத்து கொண்டு வந்திருப்பதாக தெரிவித்த மாணிக்கம், அந்த மருந்தை இந்திய மருத்துவ கழகத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்து உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறும், இதனை எந்த காரணத்தை கொண்டும் வியாபார ரீதியில் பயன்படுத்த கூடாது என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.


அந்த மருந்தை காண்பிக்குமாறு சொன்னதற்கு அதெல்லாம் முடியாது அது ரகசியம் ஆட்சியரிடம்தான் காட்டுவேன் என கூறி உள்ளே சென்ற மாணிக்கம், மனுக்கள் கொடுக்கும் பகுதிக்கு சென்று மாவட்ட ஆட்சியரிடம் மருந்தை நேரில் காண்பித்த விட்டு, சிறிது நேரத்தில் அங்கிருந்து அவசரமாக வெளியேறி விட்டார்.

அடுத்த செய்தி