ஆப்நகரம்

ஸ்டாலின் வாய்க்கு பூட்டு, கண்ணுக்கு சுண்ணாம்பு.. : இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் வாய்பூட்டு போட்டுள்ளனர் என தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது கூறினார்.

Samayam Tamil 30 Oct 2019, 11:01 am
முத்துராமலிங்கர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 30) சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil Untitled collage (27)


அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுஜித் மீட்புப்பணி குறித்து திமுக ஸ்டாலின் எழுப்பிய விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார்.

சுஜித்தின் மரணத்தை வைத்தும் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்... முதல்வர் குற்றச்சாட்டு

“சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தவுடன் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள், எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, வருவாய் துறையினர், மருத்துவக்குழுக்கள் என அனைத்து தரப்பும் நான்கு நாள்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஊன், உறக்கமின்றி மீட்புப் பணியாற்றியதை மக்கள் அறிவார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் குறை காண்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார்.

திமுக ஆட்சியிலிருந்தபோது இதுபோன்ற மீட்பு பணிகளை அவர்கள் மேற்கொண்டது உண்டா? போர்கால அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டது. ஆனால் ஸ்டாலின் இதுபோன்று பேசிவருவதால்தான் மக்கள் அவருக்கு நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் வாய்ப்பூட்டு போட்டுள்ளனர். தொடர்ந்து அவர் இவ்வாறு பேசினால் அடுத்து வரும் தேர்தல்களிலும் மக்கள் இதையே செய்வார்கள். தன் கண்ணில் சுண்ணாம்பை வைத்துக்கொண்டு ஸ்டாலின் பார்க்கிறார். அதனால் அவர் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை” என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அரசை குறைகூற வரவில்லை ... சுஜித் மரணத்துக்கு அரசின் மெத்தனம் தான் காரணம்: மு.க.ஸ்டாலின்

இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கென தனி சட்டங்கள் உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் 100 சதவீதம் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசிய அவர், “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவுகள் வரவில்லை என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் உள்ளாட்சித் தேர்தல் உடனே நடைபெறும்” என்று தெரிவித்தார்.

முத்துராமலிங்கர் ஜெயந்தி விழா... மரியாதை செய்யப் படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்..

மீனவர்களுக்கான நிவாரணம் குறித்து பேசிய அமைச்சர், “தீபாவளிக்கு இராமநாதபுரம் மீனவர்களுக்கு 4500 ரூபாய், மகளிர் சேமிப்பு நிதியாக 4,500 ரூபாய், மீன்பிடிதடை காலத்துக்காக 5,000 ரூபாய் என ஒரு குடும்பத்துக்கு 14,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத்துறை சார்பாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை திறந்துள்ளோம். வானிலை ஆய்வு மையம் மூலம் தகவல்களைப் பெற்று மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்திவருகிறோம்” என்று கூறினார்.

அடுத்த செய்தி