ஆப்நகரம்

ஆவின் பால் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை!

ஊரடங்கின்போது ஆவின் பாலை அதிக விலைக்கு விற்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்.

Samayam Tamil 21 Apr 2020, 8:04 pm
ஊரடங்கு சூழ்நிலையை பயன்படுத்தி ஆவின் பாலை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்.
Samayam Tamil ஆவின் பால் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு தொழிற்சாலை ஊழியர்களின் சுமார் 30,000 குடும்பங்களுக்கு அரிசி வழங்குவம் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பட்டாசு தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக அரிசி வழங்கி உதவி செய்யப்படுகிறது. இது மேலும் தொடரும். அமைப்புசாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.

பட்டாசுத் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணம் சென்றடைந்துவிடும். மற்ற தொழிலாளர்களுக்கும் விரைவில் பணம் கிடைக்கும். எட்டு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் அரிசி, காய்கறி, எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்களுக்கு பிரச்சினையின்றி இத்தனை நாள் ஊரடங்கு நிறைவேறியுள்ளது.

இதற்கு காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறையின் சிறப்பான பணியே காரணம்.” என்று தெரிவித்தார். ஊரடங்கு சூழலை பயன்படுத்தி ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “பெருநிறுவனங்கள் அனைத்தும் பால் கொள்முதலை நிறுத்திவிட்டனர். ஆனால் தற்போது ஆவின் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. அதேபோல பால் விற்பனையும் அதிகரித்துள்ளது.

ஆவின் பணியாளர்கள் உயிரை பணய வைத்து எல்லா இடங்களிலும் பாலை முறைப்படி விற்பனை செய்து வருகின்றனர். தமிழகம் முழுக்க ஆவின் பால் கிடைக்கிறது. பால் விநியோகத்தில் எந்தவொரு தடையும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் புகார் வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி