ஆப்நகரம்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் உடல் தகனம்; அமைச்சர் அஞ்சலி

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31 ஆவது ராஜாவான சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதியின் உடலுக்கு, தமிழக வருவாயத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Samayam Tamil 26 May 2020, 1:42 am
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்து அமைந்துள்ளது சிங்கம்பட்டி ஜமீன். சிங்கம்பட்டியின் 31 ஆவது பட்டம் பெற்றவரும், மன்னராட்சி காலத்தில் முடிசூடிய தமிழகத்தின் கடைசி ராஜாவுமான சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி, வயது முதிர்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 24) காலமானார். அவருக்கு வயது 89.
Samayam Tamil jameen


மறைந்த அவரது உடலுக்கு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மணிமுத்தாறு காவல் துறை பட்டாலியன் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலை (மே 25) அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, ராஜபரம்பரை வழக்கப்படி அவரின் உடலுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு அரண்மணையில் உள்ள தர்பார் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

3 வயதில் முடிசூட்டப்பட்ட சிங்கம்பட்டி ஜமீன்... அரச மரியாதையுடன் அடக்கம் செய்க : கருணாஸ்

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் சிங்கம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத்பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

1952 ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளபட 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வந்தார்.

தமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் முருகதாஸ் தீர்த்தபதி ஜமீன் பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 77 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் தோன்றி வந்தார்.

அடுத்த செய்தி