தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி சென்னையில் காலமானார். இதையடுத்து, பல போராட்டங்களுக்கு பிறகு கருணாநிதியின் உடல் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் உள்ள அவரது சமாதிக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அவருடைய மகன் மு.க. அழகிரி நேற்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் உள்ள அத்தனை திமுக விசுவாசிகளும் என் பக்கம் தான் உள்ளார்கள், என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காலம் பின்னாளில் பதில் சொல்லும்” என்று தெரிவித்தார்.
திமுக கட்சியினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேட்டிக்குப் பின், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கட்சியின் அதிமுக ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாள பல போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் ஒரு போஸ்டரில் திமுக கொடியில் அண்ணாவின் படத்திற்கு பதிலாக கலைஞரின் படத்தை வைத்து, கலைஞர் திமுக என்ற புது கட்சியையே தொடங்கியுள்ளனர். மேலும், ‘பொதுச் செயலாளர்’ என்பதற்கு ‘பொதுச் செயலாலர்’ என எழுத்துப் பிழையுடன் போஸ்டர் அடித்துள்ளனர்.
அதுதவிர, நேதாஜி படத்தில் அழகிரியின் முகத்தை வைத்து போராளி போஸ்டர்களையும் வைத்துள்ளனர். இந்தப் போஸ்டர்கள் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.