ஆப்நகரம்

வேறு வழியின்றி ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்

நீட் கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில் வேறு வழியின்றி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Oct 2020, 2:36 pm
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நெருங்கும் நிலையில் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, ஆளுநரிடம் இருந்து தற்போது வரை எந்த முடிவும் வராததால் Article 162ஐ பயன்படுத்தி நிர்வாக அதிகாரத்தின் படி கொள்கை முடிவெடுத்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்..! உருவானது புதிய சட்டம்

இந்த நிலையில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், அந்த மசோதா சட்டவடிவம் பெற்றுள்ளது. கடந்த மாதம் 26ஆம் தேதி சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து கேட்டு ஆளுநர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து நேற்று ஆளுநருக்கு வந்த கருத்தின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக, ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுகவின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி