ஆப்நகரம்

உணர்ச்சி, சுரணையற்றவர் எடப்பாடி: ஸ்டாலின் கடும் தாக்கு!

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 23 Sep 2020, 8:35 pm
நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Samayam Tamil ஸ்டாலின்
ஸ்டாலின்


தமிழகத்தை பொறுத்தவரை, விவசாய மசோதாக்களுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேசமயம், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வருகிற 28ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மசோதாக்கள் விவசாயிகள் முதுகெலும்பை ஒடிக்கும் வகையில் உள்ளது. இதற்கு மகிழ்ச்சியுடன் அதிமுக அரசு ஆதரவு அளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு!

ஆனால், விவசாயி ஆகிய நான் உணர்ந்ததால்தான் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் போன்று விவசாயத்தை பற்றி அறியதாவன் நான் அல்ல என்றும், வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சித் தலைவர்.ஸ்டாலின் அரசியலாக்குவதாகவும் முதல்வர் பழனிசாமி விமர்சித்திருந்தார். அத்துடன், இந்த மசோதாக்களுக்கு அதிமுகவும், முதல்வர் பழனிசாமியும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதனிடையே, வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக, கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “மாநில உரிமைகளுக்கு எதிரானவை என வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு! இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே! மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு; சொந்த நலன் தவிர வேறு சுரணையற்ற அரசு; வேளாண் சட்டங்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படத் துப்பில்லாத அரசு” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக அரசை கடுமையாக சாடி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி