ஆப்நகரம்

அழகிரி - ஸ்டாலின் சமாதானம்... திமுக மீது திருமா கோபம்... பிண்ணனியில் இருப்பவர் யார்?

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக அழகிரி மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாகவும், அது தொடர்பாக பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 16 Sep 2020, 11:33 pm
திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் முக அழகிரி ஒரு காலத்தின் தென் மாவட்டங்களில் கோலோச்சி வந்தார். இதனிடையே, ஸ்டாலினுடன் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாகவும் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்பட்டார். தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பலரும் ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர். ஒரு சிலர் மட்டுமே அழகிரியுடன் நெருக்கமாக உள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து திமுக மீதான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அதேசமயம், குடும்ப நிகழ்வுகளிலும் கூட ஸ்டாலினுடன் முக கொடுத்து பேசமல் இருந்து வந்தார். கருணாநிதி இறப்புக்கு வந்த அவர், மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்த ஊர்வலம் தோல்வியில் முடிந்தது.

இதன் காரணமாக அரசியலில் நிகழ்வுகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்து வருகிறார். அவரை பாஜக தன் பக்கம் இழுக்க போகிறது என்றும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரது நண்பராக அழகிரிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் பேசப்பட்டு வந்தது. மேலும், கலைஞர் திமுக என்ற தனிக்கட்சியை அழகிரி தொடங்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், மதுரை உடன் பிறப்புகள் ஸ்டலினுடன் அழகிரி மீண்டும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

விடுதலைக்கு தயாராகும் சசிகலா; அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரினார்!

அதேபோல், திமுகவுக்குள் அழகிரியை கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரது முக்கிய அஜெண்டாக்களில் பாமகவை கூட்டணிக்குள் இழுப்பது, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது ஆகியவை இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிண்ணனியிலேயே, திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவன் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுகவின் சீனியர்கள் சிலரது பட்டியலின மக்களுக்கு எதிரான பேச்சுகளும், அச்சமூக மக்களுக்கு திமுகவில் அதிகாரங்கள் வழங்கப்படுவதில்லை என்ற விமர்சனங்களுக்கு இடையே திருமாவளவனின் இந்த பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே, தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முக அழகிரியை தொலைப்பேசியில் அழைத்து ஸ்டாலின் நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தனது ஆதரவாளர்களிடம் ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதையும் கடந்த சில நாட்களாக அழகிரி நிறுத்தி விட்டதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஒருவேளை அழகிரியுடன் ஸ்டாலின் தொடர்ந்து பேசினால் அவர் கட்சிக்குள் மீண்டும் இணைக்கப்பட்டு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக அவரை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி