ஆப்நகரம்

தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்

Samayam Tamil 16 Oct 2020, 4:22 pm
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி (Institute of Eminence) பெற்ற நிறுவனமாக அறிவிக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதற்காக தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.1,750 கோடியை அண்ணா பல்கலைக்கழகமே வழங்கும் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ஸ்டாலின்
ஸ்டாலின்


ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் பட்டாலும் கூட, 69% இட ஒதுக்கீடு தொடரும் என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மத்திய அரசு இதுவரை எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்பதால், இட ஒத்க்கீடு முறை பாதிக்கப்படும் என்பதுடன், வட மாநில மாணவர்களின் வருகைக்கும் ஏதுவாக இருக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஓபிஆர் வெற்றி செல்லுமா, செல்லாதா? தொடரும் ட்விஸ்ட்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், உயர் சிறப்பு அந்தஸ்து மூலம் வெளிமாநில மாணவர்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி