ஆப்நகரம்

வருமானமே இல்ல... உதவி கோரும் இசைக் கலைஞர்கள்!

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள இசைக் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இசைக் கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Samayam Tamil 7 Apr 2020, 7:23 pm
கொரோனா வைரஸ் (கோவிட்-19) கொள்ளை நோய் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல தொழில்துறைகள் முழுவதுமாக முடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகைகளை அறிவித்து வருகிறது.
Samayam Tamil வருமானமே இல்ல உதவி கோரும் இசைக் கலைஞர்கள்


144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் இசைக் கலைஞர்கள் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால், இசைக் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும்படி தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மங்கள இசைக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொருளாளர் மயிலை கே.கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் வாழ்வாதாரம் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல சுபகாரியங்கள், சபா கச்சேரிகள் மூலமாக வரும் வருமானத்தைக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கோவில் திருவிழாக்களும், திருமண நிகழ்ச்சிகளும், சபா கச்சேரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மேலும், இசைக் கலைஞர்கள் தங்கள் வீட்டு செலவுக்கும், அத்தியாவசிய செலவுக்கும் என்ன செய்வது என அறியாமல் திகைத்து போயிருக்கின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு இசைக் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குமாறு மங்கள இசைக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி