ஆப்நகரம்

ஈரோடு கிழக்கு: சத்தமில்லாமல் உயரும் நாம் தமிழர் வாக்கு வங்கி! சீமான் பலே பிளான்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பயன்படுத்தி நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடம் பிடிக்கும் என்கிறார்கள்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 14 Feb 2023, 2:24 pm
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் அனலைக் கிளப்பி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகியவை தீவிரமாக களமாடி வரும் நிலையில் பாமக, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டது. பிரதான இரு கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியும், தேமுதிகவும் மட்டுமே களத்தில் நிற்கின்றன.
Samayam Tamil naam tamilar party will take advantage of the erode east by election to gain a major place in tamilnadu politics
ஈரோடு கிழக்கு: சத்தமில்லாமல் உயரும் நாம் தமிழர் வாக்கு வங்கி! சீமான் பலே பிளான்!


நாம் தமிழர் தேர்தல் ஃபார்முலா!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிகவை விட நாம் தமிழர் கட்சி தான் பிரதான இரு கூட்டணிகளுக்கு டஃப் கொடுத்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது, பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றனர் என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

திமுக, அதிமுக திட்டம் என்ன?

ஆளுங்கட்சியாக இருந்து இடைத்தேர்தலில் தோல்வியடையக் கூடாது அத்துடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக களமாடி வருகிறது. இரட்டை இலையை தனது அணிக்கு போராடி பெற்ற எடப்பாடி பழனிசாமி தோல்வியைத் தழுவினால் அணிகள் இணைப்பு அவசியம் என பாஜக மீண்டும் கூறத் தொடங்கிவிடும் என்பதால் மாஜி அமைச்சர்களை இறக்கிவிட்டு ஆளுங்கட்சிக்கு இணையாக வாக்காளர்களை ‘கவனிக்க’ உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

ஏறு முகத்தில் நாம் தமிழர்

இரு பிரதான கட்சிகளின் பார்வையும் தற்போது ஒருசேர திரும்பியிருப்பது நாம் தமிழர் கட்சியை நோக்கி தான். எந்த தேர்தல் என்றாலும் களம் காண்பதில் பயம் இல்லாதது, தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருப்பது ஆகியவை பொது மக்களுக்கு அந்த கட்சி மீது விருப்பம் வர காரணமாக அமைந்துள்ளது. மிக குறைவாக என்றாலும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

உடையும் மக்கள் நீதி மய்யம் வாக்கு வங்கி!

2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 10,005 வாக்குகள் பெற்றது. பிற கட்சிகள் சொற்ப வாக்குகளையே பெற்றன. இந்த தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்ததால் அவர் பெற்ற வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லும் என கணக்கு போடுகின்றனர் திமுக கூட்டணியினர். ஆனால் கள நிலவரம் வேறாக இருக்கிறது.

யார் ஒரிஜினல் மாற்று?

சீமான், கமல்ஹாசன் ஆகியோர் தலா 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். இந்த வாக்குகளில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு சக்தி வேண்டும் என்று போடப்பட்டவை தான் அதிகம். கமல் முகத்துக்காக விழுந்த வாக்குகளைத் தவிர்த்து மாற்றம் வேண்டும் என்று வாக்கு செலுத்தியவர்கள் இம்முறை சீமானுக்கு வாக்களிக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஏனெனில் அவர் தான் மாற்று என்று சொல்வதில் உறுதியாக இருக்கிறார் என்ற பேச்சு தொகுதி மக்களிடையே நிலவுகிறது.

திமுக, அதிமுக செய்யத் தவறியது!

அதுமட்டுமல்லாமல் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பெறுவதில் அவர் அதிமுகவுடன் போட்டி போடுவார். அதேபோல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்கு எதிராக திரும்பும் வாக்குகள் திமுகவுக்கு செல்லாமலும் சீமான் தடுப்பார் என்கிறார்கள். இதனாலே இரு பிரதான கூட்டணிகளும் சீமான் பிரச்சாரத்தை உற்று கவனிக்கின்றன. அதிமுக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமூகத்திலிருந்து வேட்பாளரை தேர்ந்தெடுக்கவில்லை. இதை சீமான் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

சூழலை சாதகமாக்கிக் கொள்ளும் சீமான்

எடப்பாடி அனுப்பிய தூது: அதிமுக வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை - எப்படியாவது சரி செய்யணும்!

முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மேனகா நாம் தமிழர் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அச்சமூக மக்களிடம் உறவுமுறை சொல்லி வாக்கு சேகரிக்கும் அவரது யுத்திக்கு பலன் இருக்கும் என்கிறார்கள். சீமானும் தனது பிரச்சாரத்தில் முதலியார் சமூகத்துக்கு முக்கியத்துவம் அளித்து பேசி வருவது கவனம் பெற்று வருகிறது. அதிமுக, திமுகவுக்கு மாற்று என்று எத்தனை கட்சிகள் எழுந்து வந்தாலும் தற்போதைய சூழலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே அந்த ரேஸில் முன்னணியில் நிற்கிறது. இடைத்தேர்தல் முடிவுகள் அதற்கு மேலும் வலு சேர்க்கும் என்கிறார்கள்.

எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி