ஆப்நகரம்

மாணவி நவீனா மரணம்: ரூ.1 கோடி வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

எரித்துக் கொலை செய்யப்பட்ட மாணவி நவீனாவின் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட அப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 3 Aug 2016, 12:53 pm
சென்னை: எரித்துக் கொலை செய்யப்பட்ட மாணவி நவீனாவின் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட அப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil naveena dead in jipmer hoaspital ramadoss urges 1 crore to family
மாணவி நவீனா மரணம்: ரூ.1 கோடி வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: காதலிக்க மறுத்தற்காக உயிருடன் எரிக்கப்பட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவி நவீனா இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த அம்மாணவி நன்றாக படிக்கக் கூடியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பு படித்து விவசாயிகளுக்கு சேவை செய்வது தான் அவரது லட்சியமாக இருந்தது என்பதை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இன்று அவரது உடலைப் போலவே அவரது கனவும் கருகிக் கிடக்கிறது. இப்படி நடக்கும் அளவுக்கு அந்த சிறுமி செய்த பாவம் என்ன? பள்ளிக் கூடத்திற்கு சிற்றுந்தில் சென்ற அம்மாணவியை ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை செய்திருக்கிறார். இதனால் அம்மாணவியின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்திற்கு பிறகு அம்மாணவி மீண்டும் பள்ளிக்கு செல்லத் தொடங்கிய சூழலில், அம்மாணவியின் குடும்பத்தினர் தனது கை, கால்களை வெட்டி விட்டதாக பொய்ப் புகார் கொடுத்து குடும்பத்தினரின் நிம்மதியை குலைத்திருக்கிறார் அந்த நபர்.

அப்போதும் அந்த நபரைக் கண்டிக்காத போலி புரட்சியாளர்கள், மாணவியின் குடும்பத்தினரையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் தான் சாதிய அடையாளத்துடன் விமர்சித்திருக்கின்றனர். அதன் விளைவாக அந்த நபர் ஆக்கமும், ஊக்கமும் பெற்று சாதிக்கத் துடித்துக் கொண்டிருந்த சிறுமியை உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறார்.

விரும்பாத பெண்ணையும் விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் தொடங்கி, கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கி பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்கு காரணமானவர்கள்தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் தடுக்க நவீனா கொலையின் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதுடன், நவீனா உயிர்நீத்த ஆகஸ்ட் 3 ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி