ஆப்நகரம்

நிவர் புயல்: மக்கள் செய்யும் முன்னேற்பாடு: அரசாங்கத்தை நம்ப முடியாதா?

புயலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 23 Nov 2020, 10:57 am
வட கிழக்கு பருவமழை தொடங்கி சில வாரங்களாகியுள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil nivar


இந்நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாகிறது என்ற அறிவிப்பு மக்களை பீதியடையச் செய்துள்ளது. அதிலும் டெல்டா பகுதி மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது இந்த அறிவிப்பு. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே பல குடும்பங்கள் இன்னும் மீண்டு வரவில்லை. பலர் வீடுகளை, கால்நடைகளை, வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது வங்கக் கடலில் இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு 'நிவர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

நிவர் புயல்: தற்போது எங்கிருக்கிறது; அதிவேகமாக எப்போ தாக்கப் போகிறது?

இந்த புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 25ஆம் தேதி காலை அல்லது பிற்பகலில் தமிழகத்தின் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை மழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலிலிருந்து தற்காத்துக் கொள்ள டெல்டா பகுதி மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளின் அருகில் உள்ள தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டி உள்ளனர். பிற மரங்களின் கிளைகளையும் வெட்டி வருகின்றனர். இதனால் மரங்கள் முறியாமல் காத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர். வைக்கோல், கடலைத்தழை உள்ளிட்ட கால்நடைத் தீவனங்களை பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். மின்பாதைகளில் உள்ள மரங்களையும் வெட்டி வருகின்றனர்.

நிவர் புயலால் எங்கெல்லாம் மழை பெய்யும்?

வேதாரண்யம் பகுதியில் உள்ள ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள், வலைகளை டிராக்டர் உதவியுடன் மேடான பகுதிகளுக்கு எடுத்து சென்று வைத்துள்ளனர். கடலில் இருக்கும் மீனவர்களுக்கும், படகு உரிமையாளர்களுக்கும் புயல் எச்சரிக்கை செய்து அவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டுமென்றும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை அறிவிப்பு செய்து வருகின்றனர்.

வாகனங்களுக்கு தேவையான அளவு எரிபொருள் நிரப்பி வருகின்றனர். மேலும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறி, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், பேட்டரி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் அப்பகுதி மக்கள் முன்கூட்டியே வாங்கி இருப்பு வைக்கின்றனர்.

அதிமுக 117 - பாஜக 117: அமித் ஷா வைக்கும் டிமாண்ட்!

கஜா புயலின் போது அரசு சார்பில் போதிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளோ, பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்னேற்பாடுகளோ செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. புயல் வந்த பின்பு மீட்புப் பணிகளும் போதிய அளவில் செய்யவில்லை. பல இடங்களில் தன்னார்வலர்களாலும் பொது மக்களாலுமே மீட்புப் பணிகள் நடைபெற்றன. எனவே இந்த முறை புயல் வருவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர் பொது மக்கள்.

அடுத்த செய்தி