ஆப்நகரம்

மீண்டும் முழு ஊரடங்கு வருமா; தமிழக அரசின் முடிவு என்ன தெரியுமா?

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருக்கிறதா என்பது பற்றி மாநில அமைச்சர் தெரிவித்த கருத்துகளை இங்கே காணலாம்.

Samayam Tamil 24 Sep 2020, 12:45 pm
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு, பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தளர்த்தப்பட்டது. தற்போது நான்காம் கட்ட தளர்வுகள் வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கின்றன. பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தில் இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது.
Samayam Tamil Tamil Nadu Lockdown


தமிழக கொரோனா நிலவரம்

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 5,52,674 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,97,377 பேர் குணமடைந்துவிட்டனர். 8,947 பேர் பலியாகியுள்ளனர். 46,350 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 66.4 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,337 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5,406 பேர் குணமடைந்துள்ளனர். 76 பேர் பலியாகியிருக்கின்றனர். இதன்மூலம் நோய்த்தொற்று முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் வைரஸ் பரவலின் வேகம் முன்பை விட பெரிதும் குறைந்துள்ளது. சுகாதாரக் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நகரும் நியாயவிலைக் கடைகள்: அரைகுறையாக அமலுக்கு வருகிறதா?

முழு ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா?

இந்நிலையில் சென்னையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது அதற்கான சூழலோ தற்போது இல்லை என்று கூறினார்.

இதையடுத்து அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு எப்போது அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேவைப்படும் போது இதுபற்றி தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

அதில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

அடுத்த செய்தி