ஆப்நகரம்

அரசியல் வேண்டாம், விவசாயிகள் நலன்போதும்: துரைமுருகன்

விவசாயிகள் நலனில் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 9 Jun 2018, 4:36 pm
விவசாயிகள் நலனில் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil durai1_08407


திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக அரசு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வெளிவந்ததில் இருந்து 113 நாட்களில் ஆக்கப்பூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும்.

தமிழக முதலமைச்சர், திமுகவை குறைகூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நீரை திறக்க வைப்பதில் அக்கறை செலுத்தவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என முதல்வர் கூறுவது வேதனை அளிக்கிறது. தோல்வியை மறைக்க திமுக மீது குறைகூறி திசை திருப்ப முனைவது அதைவிட வேதனை தருகிறது. விவசாயிகள் நலனில், அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி