ஆப்நகரம்

எடப்பாடி மூவ்: அலட்டிக்காத பன்னீர் - இதுதான் காரணம்?

எடப்பாடி பழனிசாமியின் மூவ்கள் பற்றி ஓபிஎஸ் பெரிதாக அலட்டிக் கொள்ளவதில்லையாம்

Samayam Tamil 25 Sep 2022, 9:56 am
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமான வந்ததில் இருந்தே அடுத்தக்கட்ட நகர்த்தலுக்கு தீவிரம் காட்டத்தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில், டெல்லி சென்றும் திரும்பியுள்ளார். ஆனால், டெல்லி பயணத்தில் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் எதுவும் பெரிதாக நடக்கவில்லை என்கிறார்கள். டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அமித் ஷாவை சந்தித்து விட்டு அவர் திரும்பியுள்ளார். அமிஷ் ஷாவோ அனைவரும் இணைந்து செயல்படும் வழியை பாருங்கள் என்று அட்வைஸ் செய்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்


இதனிடையே, தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆவது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ளதாலும், அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதாலும் அதற்கு முன்னதாகவே கூட்டத்தொடர் கூட்ட அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சட்டப்பேரவை கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வானதுமே ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்தே நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதே கையோடு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கிய இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்துள்ளார். அத்துடன், ஓபிஎஸ் நீக்கத்தையும், ஆர்.பி.உதயகுமாரின் நியமனத்தை ஏற்குமாறும் சபாநாயகரிடம் எடப்பாடி தரப்பு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது. அதேபோல், அந்த கடிதத்தை ஏற்கக் கூடாது என ஓபிஎஸ்ஸும் ஒரு கடிதம் அளித்துள்ளார்.

ஆனால், அந்த கடிதம் மீது சபாநாயகர் அப்பாவு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. சட்டமன்றத்தின் மான்பு கெடாத வகையில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்றம் கூடிவிட்டால், ஓபிஎஸ் அருகில் அமர வேண்டி வரும் என்பன உள்ளிட்ட காரணங்களால் அந்த பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கிவிட பல்வேறு முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸோ அலட்டிக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார்.

செக் வைக்கும் ஸ்டாலின்: கிலியில் அதிமுக அணிகள்!
இதற்கான காரணங்கள் குறித்து விசாரிக்கையில், “ஓபிஎஸ் பற்றி எப்படி கடிதம் கொடுத்தார்களோ. அதேபோன்று அவரது மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும், அவரை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் எடப்பாடி தரப்பு கடிதம் எழுதியது. ஆனால், அந்த கடிதத்தை ஓம் பிர்லா ஏற்கவில்லை. இதனால், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்.பி.யாகவே ரவீந்திரநாத் தொடர்ந்தார். இதனை சுட்டிக்காட்டி அதேபோன்றதொரு முடிவைத்தான் சபாநாயகர் அப்பாவும் எடுப்பார் என ஓபிஎஸ் நம்புகிறார். அதனால்தான், அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருக்கிறார் ஓபிஎஸ்.” என்கிறார்கள்.

அடுத்த செய்தி