ஆப்நகரம்

திராவிட மாடல் மக்களுக்கு பயன் தராத மாடல்.. திமுகவை திடீரென விமர்சிக்கும் ஓபிஎஸ்.. ரைட்டு..

திமுக அரசையும், திராவிட மாடலையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 7 May 2023, 3:01 pm
சென்னை: திராவிட மாடல் தங்களுக்கு பயன்தராது என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ops stalin


முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது முதலாக, பல யூகங்கள் சுற்றி வரும் நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசின் இரண்டாண்டு சாதனைகள் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஓபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எண்ணிலடங்கா வேதனைகள்: சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கி, மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியை பிடித்தது. திமுக அரசின் இந்த இரண்டாண்டு கால ஆட்சியில் 'திராவிட மாடல்' என்ற பெயரில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்காது. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகளை மறுபுறம் பார்க்க முடிகிறது.

கடலில் பேனா அவசியமா?
திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் கேட்டால் கடன், நிதிப் பற்றாக்குறை என திமுக அரசு கூறும். ஆனால், கடலில் பேனா சிலையை அமைக்க துடிப்பது சுயநலத்தின் உச்சம். பொதுநலத் திட்டத்தை நிறைவேற்றவே நிதி இல்லாத சூழலில், தன்னலத் திட்டம் எதற்கு என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

அராஜகம், அடாவடி: ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாடு செல்கிறதா என்றால் அதுவும் கிடையாது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் இருக்கிறது. அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. செய்தித்தாள்களை படித்தாலே பாலியல் பலாத்காரங்கள்தான் அதிகம் பார்க்க முடிகிறது. திமுகவினர் அரசு ஊழியர்களை மிரட்டுவது, ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் கொலை செய்தது, ஒரு எம்.பி.யின் வீட்டையும், அங்குள்ள வாகனங்களையும் அமைச்சரின் ஆதரவாளர்களே துவம்சம் செய்தது, பொதுமக்களை அமைச்சர்கள் அடிப்பது, கிண்டல் செய்வது என பல கேலிக்கூத்துகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.

தானியங்கி மது இயந்திரம் வேறு.. வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழியின் படி, சட்டத்தை காக்க வேண்டியவர்களே சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மணல் கடத்தலும், ரேஷன் பொருட்கள் கடத்தலும் அமோகமாக நடந்து வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், வன்முறைக் களமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. பூரண மதுவிலக்கு என்று கூறிவிட்டு, பார்கள் மூலமும், தானியங்கி இயந்திரங்கள் மூலமும் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

திராவிட மாடல் பயன் தராது: மொத்தத்தில், தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க 'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். தமிழ்நாட்டு மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள். அவர்களுக்கு "வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது?" என்ற வித்தியாசம் நன்கு புரியும். தமிழர்கள் தங்களுடைய மனக் குமுறலை திமுக அரசுக்கு வெளிப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி