ஆப்நகரம்

அடேங்கப்பா, அதுக்குனு இத்தனை மடங்கா? தமிழகத்தில் உயர்கிறது ஆம்னி பேருந்து கட்டணம்!

ஊரடங்கிற்கு பிறகு தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 May 2020, 1:58 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுப் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் கட்ட ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையில் நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil ஆம்னி பேருந்துகள்


எனவே பொதுப் போக்குவரத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த சூழலில் வரும் திங்கட்கிழமை முதல் அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பரீட்சையை தள்ளி வைங்க முதல்வரே: பத்தாம் வகுப்பு மாணவர் கடிதம்!

இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளின் சங்க தலைவர் அப்சல் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தமிழகத்தில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும். தற்போது ஒரு கி.மீக்கு ரூ.1.60 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ரூ.3.20ஆக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளார். இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர் ஆம்னி பேருந்துகளில் இனி இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்: டாஸ்மாக் தரப்பு பதில் மனு

ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வரும் நாட்களிலும் பல்வேறு டிராவல்ஸ்களும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இவற்றை சமாளிக்கும் வகையில் இருமடங்கு கட்டண உயர்வு என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு முறை ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கும் போதும் தமிழக அரசு குறுக்கிட்டு கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் முடிவிற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த செய்தி