ஆப்நகரம்

இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கின்றன: நீதிபதிகள் காட்டம்

திமுக, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தவிர பிற கட்சிகள் நீதிமன்ற நோட்டீஸுக்கு பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காத ஒன்பது கட்சிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Samayam Tamil 19 Mar 2019, 6:01 pm
இந்தியாவை ஆட்சி செய்வது 500 குடும்பங்கள்தான் என்றும் மக்களாட்சி நடக்கிறதா மன்னராட்சி நடக்கிறதா என சந்தேகமாக இருப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டித்துள்ளது.
Samayam Tamil court1


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரமாக தேர்தல் வாக்குறுதியை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் அரசியல் கட்சிகளின் விளக்கத்தைக் கேட்டிருந்தனர். திமுக, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தவிர பிற கட்சிகள் நீதிமன்ற நோட்டீஸுக்கு பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காத ஒன்பது கட்சிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டினர். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கின்றன. பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. இது மக்களாட்சியா? மன்னராட்சியா? என்று தெரியவில்லை.” எனச் சாடினர்.

மேலும், அபராதம் விதிக்கப்பட்ட கட்சிகள் அபராதத்தை நன்கொடையாக செலுத்துங்கள் என உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி