ஆப்நகரம்

கமல், ரஜினி என்ற பலூன்கள் வெடிக்கும்: ஓபிஎஸ் ஆவேசம்

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கமல் மற்றும் ரஜினியை சூசகமாகத் தாக்கியுள்ளார்.

Samayam Tamil 24 Feb 2018, 3:48 pm
சென்னை: அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கமல் மற்றும் ரஜினியை சூசகமாகத் தாக்கியுள்ளார்.
Samayam Tamil ops attacks rajini and kamal comparing to balloons
கமல், ரஜினி என்ற பலூன்கள் வெடிக்கும்: ஓபிஎஸ் ஆவேசம்


அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இவரது உருவப்படம் அண்மையில் தமிழகச் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், இன்று அவரது 70வது பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீரும் திறந்துவைத்தனர். இந்தச் சிலை ஹைதராபாத்தில் செய்து கொண்டுவரப்பட்டது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது புரட்சித் தலைவி அம்மா என்ற நாளிதழின் முதல் இதழும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பி.எஸ். கமல் மற்றும் ரஜினியை கடுமையாகத் தாக்கினார். “அரசியல் அரிதாரம் பூசிய சிலர் மக்களை காக்க வந்த ரட்சகர்கள் போல வீர வசனம் பேசுகிறார்கள். மக்களைக் காப்பாற்றப் போவது நாங்கள்தான் என்று கூறும் அவர்களின் பேச்சு விரைவில் புஸ்வாணமாகும்.

எதிரிகளும் துரோகிகளும் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். அதிமுகவை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கி கிடக்கின்றன. அரசியல் வானில் வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்க தொடங்கியிருக்கின்றன. அவை பார்க்க அழகாக இருந்தாலும், அவை வெடித்து சிதறுவதை நம் கண்முன் பார்க்கத்தான் போகிறோம். அவர்களின் வஞ்சக வலையை அறுத்தெறிந்து கட்சியையும் ஆட்சியையும் ஒற்றுமையாக கட்டிக்காப்போம். எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி காண்போம்.” என்று பன்னீர்செல்வம் ஆவேசமாகப் பேசினார்.

அடுத்த செய்தி