ஆப்நகரம்

ப.சிதம்பரம் செஞ்ச வேலைக்கு ஸ்ரீவத்சா பலிகடாவா? மத்திய அமைச்சருக்கு எதிராக பொங்கிய குருமூர்த்தி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த வேலைக்கு, டுவிட்டரில் துக்ளக் குருமூர்த்தி பொங்கியுள்ளார்.

Samayam Tamil 11 Jun 2019, 5:51 pm
பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் பொறுப்பு ஏற்றதும், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இவர் தனது அமைச்சகத்தில் முதல் அதிரடியை நடத்தியுள்ளார். அதாவது குற்ற வழக்குகள், பாலியல் புகார்களை எதிர் கொண்டிருக்கும் நிதியமைச்சகத்தின் 12 உயர் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பி விட்டார்.
Samayam Tamil S-Gurumurthy-770x433


இது நிதியமைச்சகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்சா. இவருக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி களத்தில் குதித்துள்ளார்.

அதாவது, ஸ்ரீவத்சாவிற்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தூண்டுதலால் போடப்பட்டவை. இதை நம்பி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இணைந்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எனக்கு தெரிந்தவரை ஸ்ரீவத்சா மிகவும் நேர்மையானவர். என்.டி.டி.வி நிறுவன முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தவர்.

15 ஆண்டுகளாக ப.சிதம்பரத்திற்கு எதிராக போராடி வருகிறார். மோடி ஆட்சி செய்யும் இந்த அரசிலும் ப.சிதம்பரம் மற்றும் என்.டி.டி.வியின் அதிகாரம் வேலை செய்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம் நிர்மலா சீதாராமன் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் சரியானதே என்றும் ஆதரவான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி