ஆப்நகரம்

நாங்க வந்தேறியா..? நாம் தமிழர் வேட்பாளரை விரட்டிய மக்கள்... ஈரோட்டில் பரபரப்பு

குறிப்பிட்ட இன மக்களை வந்தேறிகள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்ப்பு.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 17 Feb 2023, 5:16 pm
தமிழ்நாட்டில் பிற மொழி பேசுபவர்களை வந்தேறிகள் என்று சீமான் அழைத்ததற்கு தேர்தல் நேரத்தில் எதிர்வினையாற்றிய குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்த வாக்காளர்கள்.
Samayam Tamil particular community people opposed nam tamil party candidate to campaign in erode east constituency
நாங்க வந்தேறியா..? நாம் தமிழர் வேட்பாளரை விரட்டிய மக்கள்... ஈரோட்டில் பரபரப்பு


நாம் தமிழர் வேட்பாளருக்கு எதிர்ப்பு

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அதிமுகவும் - காங்கிரசும் பலப்பரீட்சை நடத்தினாலும் காங்கிரசுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியாக உள்ள திமுகதான் செல்வாக்கை காட்டி வருகிறது. அடுத்ததாக தனித்து போட்டியிட்டு வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் சார்பில் மேனகா என்பவர் போட்டியிடுகிறார்.

முதலியார் வாக்கு

ஈரோடு கிழக்கில் முதலியார் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அச்சமூகத்தை சேர்ந்த பெண்ணை சீமான் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். ஆனால், மற்ற போட்டியாளர்கள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர் என்பதால் நாம் தமிழருக்கான தேர்தல் களம் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ள சீமான் அனல் பறக்கும் பேச்சுக்களால் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

வந்தேறி ஓட்டு மட்டும் எதுக்கு

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குறிப்பிட்ட சமூக மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தங்களது சமுக மக்களை வந்தேறிகள் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக சுட்டிக்காட்டிய அவர்கள் தற்போது எங்களிடமே வாக்கு சேகரிக்க எப்படி வருகிறீர்கள் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். மேலும், ஆதி தமிழ் குடிகளே நாங்கள்தான் எங்களை போய் வந்தேறி என்று சீமான் சொல்வாரா என்று கேள்வி எழுப்பினர்.

கொந்தளித்த குறிப்பிட்ட சமூகத்தினர்

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் தமிழர் மட்டும்தான் ஆள வேண்டும் என்று ஆவேசமாக சீமான் பேசுவது வழக்கம். அவ்வாறு பிற மொழி பேசும் மக்களை தமிழர்கள் இல்லை என்றும் அவர்களை வந்தேறிகள் என்றும் சீமான் கூறுவார். இதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட சமூக மக்கள் தற்போது தேர்தலில் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு எதிரிவினையாற்றியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

அதிமுக வேட்பாளருக்கும் எதிர்ப்பு

இதேபோல, ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் தென்னரசுவை பெண் ஒருவர் முற்றுகையிட்டார். கடந்த முறை எம்எல்ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை எனக்கூறி அந்த பெண் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பின்னர் திமுகவினரின் தூண்டுதல் இருக்கும் என்றும் இரு கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி