ஆப்நகரம்

தமிழகத்தில் தலைதூக்கும் ‘பவாரியா’ கொள்ளை கும்பல்!

சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த ஆறு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Samayam Tamil 22 Sep 2019, 5:59 pm
நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். கடந்த 19ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றார். இந்நிலையில், அவரது மனைவியும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) வீட்டை பூட்டி விட்டு, எழும்பூருக்குச் சென்றுள்ளார். இரவு வீட்டுக்கு திரும்பிய போது, கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 150 சவரன் தங்க நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
Samayam Tamil Untitled collage


இது குறித்து அவர், பழவேந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும், கைரேகை நிபுணர்களும் அந்த வீட்டில் ஆய்வு செய்தனர். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 வடமாநில இளைஞர்கள் 20ஆம் தேதி மதியம் 3 மணியளவில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிவதும், பின்னர் ரமேஷ் வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதிப்பதும், கொள்ளையடித்த நகைகளை பையில் போட்டு மீண்டும் வெளியே வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

அந்த இரு இளைஞர்களும் ஒரு ஆட்டோவில் நேரடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மும்பைக்கு சென்றனர். இந்நிலையில் பரங்கிமலை உதவி ஆணையர் சங்கர நாராயணன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்த இருவர் குறித்த தகவல்கள் மற்ற காவல்நிலையங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. பின் இருவரும் மும்பையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது விவரம் தமிழக காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் 4 பேர் கொண்ட தனிப்படை இன்று காலை மும்பை விரைந்தது.

பிடிபட்ட இருவரிடம் நடைபெற்ற விசாரணையில் இந்தி என்ற பகுதியில் அவர்களது கூட்டாளிகள் மேலும் நான்கு பேர் இருப்பதாக தெரியவந்தது. அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் இவர்கள் பவாரியா கொள்ளைக் கூட்டத்தினர் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் பல்லாவரத்தில் 117 சவரன் நகையும், தாம்பரத்தில் 50 சவரன் நகையும் கொள்ளை போயுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

யார் இந்த பவாரியா?

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் வாழும் குறிப்பிட்ட ஒரு பழங்குடியினத்தின் பெயர் பவாரியா. இவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கொள்ளையடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடுவர். இவர்களில் சிலர் கொள்ளையின் போது கொடூரமான கொலைகளையும் செய்துள்ளனர். தமிழகத்தில் 1995 முதல் 2005 வரை நடைபெற்ற பல்வேறு கொலை, கொள்ளை குற்றங்களை பவாரியாக்கள் செய்துவந்தனர். முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தது. இதை அடிப்படையாகக் கொண்டே கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி