ஆப்நகரம்

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்: இந்த இலவச நம்பரில் புகார் அளிக்கலாம்!

ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய கட்டணமில்லா இலவச தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

Samayam Tamil 4 Nov 2020, 11:08 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதையடுத்து அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி, தமிழகத்தில் இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனாலும், குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கும், பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கும் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக வழக்கமாக இயப்படும் பேருந்துகளை விட நடப்பாண்டில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

மருத்துவப் படிப்பு: அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இதுஒருபுறமிருக்க, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக 1800 425 6151 என்ற தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார்கள் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் சிறப்பு பறக்கும் படை மூலம் மூலம் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி