ஆப்நகரம்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் : பொதுமக்கள் அவதி!

கொடைக்கானல் நகரில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்

Samayam Tamil 11 Jan 2019, 9:29 pm
கொடைக்கானல் நகரில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
Samayam Tamil Omni Bus


பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஒரு வாரம் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை கொண்டாடுவதற்காக உள்ளூர் மக்கள் அதிக அளவில் கொடைக்கானல் நகருக்கு வருகின்றனர். அத்துடன் தொடர் விடுமுறையின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து கொடைக்கானல் வருவதற்கு இருக்கை கட்டணமாக 600 ரூபாய் முதல் 700 ரூபாயாக இருந்தது தற்போது ஆயிரத்து 300 முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாயாகவும் படுக்கை வசதி கட்டணம் 1000ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு இந்த கட்டணங்கள் ஆன்-லைனிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வால் உள்ளூர் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கல்லூரி மாணவர்களின் உறவினர்கள் கூறுகையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் சென்னையில் படிக்கின்றனர். அவர்கள் விடுமுறை நாட்களிலேயே இங்கு வருகின்றனர். இதற்காக பேருந்து கட்டணம் அதிக அளவில் உயர்த்தி கொள்ளை அடிக்கின்றனர். கட்டணம் குறித்து ஆன்-லைனிலும் பதிவிடுகின்றனர்.

இதனை பார்த்தாவது அரசு உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுத்து கட்டண கொள்ளையினை தடுப்பதுடன் அனைத்து நாட்களிலும் சீராண கட்டணம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி