ஆப்நகரம்

வெளிநாட்டு வேலைகளில் கொடுமை:மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்..!

வெளிநாட்டு பணிகளுக்கான வேலைவாய்ப்பு மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNN 15 Jul 2016, 5:51 pm
வெளிநாட்டு பணிகளுக்கான வேலைவாய்ப்பு மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil pil in madras hc seeks setting up of agency to send workers abroad
வெளிநாட்டு வேலைகளில் கொடுமை:மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்..!


வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இந்தியர்கள்,குறிப்பாக வீட்டு வேலைகளுக்கு செல்லும் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாவதாகவும்,எனவே வெளிநாட்டு வேலைகளை ஒழுங்குபடுத்த வேலைவாய்ப்பு மையம் ஒன்றை மத்திய அரசு தொடங்க வேண்டும் என கோரி கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.


இந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு தனியார் நிறுவனங்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றன.அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் நல்ல சம்பளத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பெண்களை ஏமாற்றி வருகின்றன.இந்த நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் மட்டுமே அளிக்கப்படுவதோடு 20 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.சரியான உணவும் அளிக்கப்படுவதில்லை.பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர்.வேலைக்கு செல்லும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை அந்த நிறுவன உரிமையாளர்கள் பறித்து வைத்துக் கொள்வதால்,இந்திய தூதரகத்தையும் அவர்களால் அணுக முடிவதில்லை.

இந்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி,ஆறு மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருவதாகவும்,அவர்களில் ஐந்து லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.மலேசியாவில் மட்டும் 50,000 இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

எனவே வெளிநாட்டு வேலைகளுக்கென மத்திய அரசே ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையத்தை உருவாக்கி,அதன் மூலம் இந்தியர்களை வேலைக்கு அனுப்பி வைத்து,அவர்களின் நிலை என்ன என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.இது குறித்து மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை,இது குறித்து பதிலளிக்க மத்திய உள்துறை,வெளியுறவுத்துறை,மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

அடுத்த செய்தி