ஆப்நகரம்

புறநகர் ரயில்களில் 'ஏசி’; விரைவில் சென்னையில் குளுகுளு பயணம் - தெற்கு ரயில்வே!

சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்களில் ஏசி வசதி செய்வது குறித்து தெற்கு ரயில்வே முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது.

Samayam Tamil 12 May 2019, 5:00 pm
சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்கள் பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. குறைந்த கட்டணத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரலாம்.
Samayam Tamil Chennai Suburban


இந்நிலையில் மெட்ரோ ரயில் வசதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த ரயிலில் கட்டணம் சற்று அதிகம். இதனால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது.

இந்த சூழலில் எளிய மக்கள் பயணம் செய்யும் புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வே முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது. இது தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் நடைபெற்றது.

அதில் ஏராளமான ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாட்டிலேயே மும்பையில் மட்டும் புறநகர் ஏசி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை புறநகர் ரயில்களில் குறைந்தபட்சம் ரூ.5ம், முதல் வகுப்பில் ரூ.40ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே ஏசி வசதியுடன் பயணிக்க ரூ.55 கட்டணமாக நிர்ணயிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இது முதல் வகுப்பு கட்டணத்தை விட 1.5 மடங்கு அதிகம். முதல் கட்டமாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு ஏசி ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி