ஆப்நகரம்

தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்ட மோசடி: மத்திய அமைச்சர் என்ன சொல்கிறார்?

பிரதமர் கிசான் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 15 Sep 2020, 9:57 pm
பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ,000 மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும். இந்த நிலையில், தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி பயனாளிகளாக சேர்ந்து, இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
Samayam Tamil நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்


குறிப்பாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இத்திட்டத்தில் ரூ.110 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரண மேற்கொண்டு வரும் சிபிசிஐடி அதிகாரிகள் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அது தவிர, வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவினரும் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழகத்தில் கிசான் நிதி திட்டத்தில் நடந்துள்ள ஊழல் தனது கவனத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

மேலும், பிரதமர் கிசான் நிதி திட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்று தெரிவித்த நரேந்திர சிங் தோமர், நிலம் வைத்துள்ள, நிதி உதவி பெற தகுதி உள்ள விவசாயி யார் என்பதை கண்டறிவது மாநில அரசின் பொறுப்பு என்றும், தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட கிசான் உதவி நிதி ரூ.47 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸார் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்து 16 பேரை கைது செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் 19 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கணினி கடவுச் சொற்களை திருடி சிலர் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி