ஆப்நகரம்

தஞ்சை ஓவியம், நாச்சியார்கோவில் விளக்கு.... ஷி ஜிங்பிங்கிற்கு பரிசளித்த மோடி !!

மாமல்லபுரம் வருகை தந்த சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிற்கு, நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு, சரஸ்வதி நடனமாடும் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசாக வழங்கினார்.

Samayam Tamil 11 Oct 2019, 8:28 pm
சீன அதிபர் ஷி ஜிங்பிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மதியம், சென்னை வந்தடைந்தார். கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பிரதமர் மோடியுடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்காக மாலை 5 மணியளவில் மாமல்லபுரம் சென்றடைந்தார்.
Samayam Tamil pai


உலகின் மிகப்பெரிய இரு நாட்டு தலைவர்களின் இச்சந்திப்பில் பல்வேறு பாரம்பரிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இதன் முதல் அம்சமாக, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தபடி சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி.

மாமல்லபுர சிற்பங்களை சுற்றிப் பார்த்த இரு நாட்டு தலைவர்களும், தேநீர் இடைவேளையின்போது, தமிழகத்தின் பாரம்பரிய பானங்களில் ஒன்றான இளநீரை பருகி மகிழ்ந்தனர்.

அதைத்தொடர்ந்து, மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் அரங்கேறிய பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.

கலை நிகழ்ச்சிகளின் முடிவில், சீன அதிபருடனான தமது சந்திப்பின் நினைவாக பிரதமர் மோடி அவருக்கு, சரஸ்வதி தேவி நடனாடும் விதத்தில் தீட்டப்பட்ட தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார்கோவில் அன்னம் விளக்கு ஆகிய பாரம்பரிய பொருள்களை பரிசாக வழங்கினார்.

தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் (பூம்புகார்) இந்த நினைவுப் பரிசுகளை தயாரித்துள்ளது.

அடுத்த செய்தி