ஆப்நகரம்

என்னது 1,000 ஏக்கர் நிலமா? நிரூபித்தால் அதை திமுகவுக்கே தந்துவிடுகிறேன் : ராமதாஸ் சவால்

தமக்கு 1,000 ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்வதை, திமுக நிரூபிக்கட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

Samayam Tamil 19 Nov 2019, 11:04 pm
தமக்கு 1,000 ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்வதை நிரூபித்தால், அந்த நிலத்தை அப்படியே திமுகவுக்கே கொடுத்து விடுகிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
Samayam Tamil mksdr


முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு திமுகவுக்கும், தமிழக தலைமைச் செயலருக்கும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதன்படி, சென்னையில் முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமா என்பது குறித்து முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி இன்று விளக்கமளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " எங்கள் மடியில் கனமில்லை. அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொடுத்துள்ளோம். புகார் கொடுத்த பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் இதுவரை எந்த ஆவணத்தையும் கொடுக்காததால் அவரும், தலைமைச் செயலாளரும் மேலும் அவகாசம் கேட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலகம் பஞ்சமி நிலம் என கூறினால் விசாரிப்பீர்களா? ஆர்.எஸ்.பாரதி காட்டம்

பிரதமர் அலுவலகத்தை பஞ்சமி நிலம் என்று சொன்னால் நீங்கள் விசாரிப்பீர்களா என ஆணையரிடம் கேட்டேன். அதற்கு முறையாக பதில் வரவில்லை. இதுகுறித்து விசாரிக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளேன்.

சில விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். நாங்கள் அனைத்து விதமான ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். என்னை பொறுத்தவரை இந்த வழக்கு இத்துடன் முடிந்துவிட்டது. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி.

அத்துடன், இந்த விவகாரத்தை எழுப்பிய மருத்துவரின் 1,000 ஏக்கர் நிலம் குறித்து தெரிவிக்க உள்ளோம் " என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். இதன் மூலம். பாமக நிறுவனர் ராமதாஸை திமுக மறைமுகமாக சாடியிருந்தது.

தன் மீதான ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்துக்கு ராமதாஸ், தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி நேரில் ஆஜராக உத்தரவு!

அதில், "முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை!

முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!" என ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி