ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல்.. பாமகவினருக்கு ராமதாஸ் கொடுத்த அட்வைஸ்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாமகவினருக்கு ராமதாஸ் கொடுத்த ஆலோசனை.

Samayam Tamil 27 Jan 2022, 9:03 pm
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் களத்தை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
Samayam Tamil Ramadoss


இந்நிலையில், தேர்தல் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி நாளை மனுத் தாக்கல் தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய பிப்ரவரி 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடைசி நாள். இடையில் இருப்பவை 7 வேலை நாட்கள் மட்டும் தான். அதற்குள்ளாக வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது, வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டவர்கள் மனுத்தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை தயாரித்து தாக்கல் செய்வது ஆகிய இரு இமாலயப் பணிகள் உள்ளன.

இந்தப் பணிகளை நீங்கள் திறம்பட செய்து விடுவீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு நல்லத் தொடக்கம் பாதி வெற்றி (Well begun is half done) என்பது தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் பொன்மொழி. இதை உணர்ந்து, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்குமான தகுதியான, வெற்றிவாய்ப்புள்ள, கட்சியையே உயிர்மூச்சாகக் கொண்டவர்களை வேட்பாளர்களை விருப்பு, வெறுப்பின்றி மாவட்ட செயலர்களும், பார்வையாளர்களும் தேர்வு செய்யுங்கள். அதுவே பாதி வெற்றியை உறுதி செய்யும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த பதவிகள் அனைத்துக்கும் கட்சி சின்னங்களின் அடிப்படையில் தான் தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
இந்த அனைத்து பதவியிடங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாம்பழம் சின்னத்தில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு விட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து உத்தேசப் பட்டியலை தயார் செய்து வைத்திருப்பீர்கள். மேலிடப்பார்வையாளர்களுடன் கலந்து பேசி வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் தயாரிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பரப்புரைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்கும் உள்ளரங்கக் கூட்டங்களைத் தவிர, வெளி அரங்கக் கூட்டங்களும், பேரணிகளும் வரும் 31-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை நீட்டிக்கப்படலாம். இத்தகைய சூழலில் 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது மட்டும் தான் முதன்மை பரப்புரையாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இத்தகைய பரப்புரை மற்றவர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்; நமக்கு இது மிகவும் பழகியது தான். காலம் காலமாக நாம் மேற்கொண்டு வரும் திண்ணைப் பிரச்சார முறை தான் இது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பாட்டாளிகள் 10 பேர் கொண்ட பல்வேறு குழுக்களாக, முகக்கவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடித்து மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தது 10 முறையாவது வாக்காளர்களை சந்தித்தால், அதே எண்ணிக்கையில் பிற குழுக்களும் வாக்காளர்களை சந்திக்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பது தான் நமது ஒற்றை இலக்கு. அதற்கான பரப்புரைகளையும், மக்கள் சந்திப்பையும் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். பரப்புரை உத்திகள், மக்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகியவை குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நாளை இணையவழியில் நடத்தவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கலாம்.

இப்போதைய நிலையில், வில்லில் இருந்து விடுபட்ட அம்பு எவ்வளவு வேகமாக இலக்கை நோக்கி பறக்குமோ, அவ்வளவு வேகமாக, வெற்றிக்காக கடுமையாக உழைக்க, களத்தை நோக்கி விரைய பாட்டாளிகளைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி