ஆப்நகரம்

''மண்டபங்களில் மதுபானம்''.. கோர்ட்டுக்கு செல்லும் பாமக.. திமுகவுக்கு வந்தது செக்.!

தமிழக அரசின் மதுவுக்கான சிறப்பு உரிமம் அறிவிப்புக்கு எதிராக பாமக பொதுநல வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 24 Apr 2023, 2:51 pm
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு உரிமம் பெற்று மது விருந்து நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாமக வழக்கறிஞர் கே. பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil k balu


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக அதிமுக, திமுக ஆட்சிகளின்போது கோரிக்கை வைத்து வருகிறது. படிப்படியாக மதுக்கடைகளை மூடுங்கள் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் 24 மணி நேரம் டாஸ்மாக், பார் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மது வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக திருமண மண்டபங்கள், விளையாற்று மைதானங்கள், மாநாட்டு மையங்கள், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பணம் கட்டி சிறப்பு உரிமம் பெற்று மது விருந்து நடத்தலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்போவதாக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் பேசுகையில், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ள நிலையில், அரசு தரப்பில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மதுவுக்கு பூரண தடை விதிக்க வேண்டும் என பாமக நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில், மாநாட்டு அரங்குகள், மாநாட்டு மையங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ஆகியவற்றில் மதுபானம் வழங்குவதற்கான சிறப்பு உரிமம் பெற அனுமதிக்கும் சமீபத்திய அறிவிப்பு சவாலானது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆன்லைன் முறையில் இதுபோன்ற சிறப்பு உரிமங்களை எளிதாகப் பெறுவதற்கும், பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் ஆண்டுக் கட்டணம் செலுத்தி மதுபானங்களை வழங்குவதற்கும் அனுமதிக்கும் இத்தகைய அறிவிப்பை அரசு தரப்பில் கொண்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் என்று அவர் கூறியதாக இந்து செய்தி இணையதளத்தில் வெளியாகியுள்ளது
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி