ஆப்நகரம்

தமிழக அரசை நம்புகிறோம்: பாமக அன்புமணி சொன்ன காரணம்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக வெளியான தீர்ப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2022, 4:29 pm
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anbumani ramadoss


இதுதொடர்பாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனாலும், இதில் சில சாதக அம்சங்களும் இருக்கின்றன. 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் 7 காரணங்களைக் கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தனர்.

அந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறு என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரே ஒரு காரணத்தால்தான் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதாவது புள்ளி விவரங்கள் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி தணிகாச்சலம் வழங்கிய அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவொரு முடிவு கிடையாது. தொடர்ச்சிதான்.
கொரோனா நான்காவது அலை: மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?
இப்போது தமிழக அரசு உடனடியாக ஒரு ஆணையத்தை உருவாக்கி, வன்னியர்களின் சமூக பொருளாதார நிலை குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டி, உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதை நிச்சயமாக செய்ய முடியும்.

இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறிப்பாக இட ஒதுக்கீட்டை மாநில அரசு கொண்டு வரலாம் என்றும், உள் இட ஒதுக்கீடு கொண்டு வரலாம் என்றும், ஒரு தனிப்பட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கொண்டு வரலாம் என்றும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: ஸ்டாலினுக்கு வேல்முருகன் வைத்த கோரிக்கை!
எனவே, புள்ளி விவரங்களைத் திரட்டி, சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். தமிழக அரசு இதை செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 1984ஆம் ஆண்டு அம்பாசங்கர் குழு, வீடு வீடாக புள்ளி விவரங்கள் சேகரித்தது. அதற்குமுன் 1969ஆம் ஆண்டு சட்டநாதன் பரிந்துரை குழு அளித்தது. பிறகு நீதியரசர்கள் ஜனார்த்தனன், தணிகாசலம் பரிந்துரைகள் அத்தனை புள்ளி விவரங்கள் இருக்கிறது. ஆனாலும் நீதியரசர் தணிகாசலம் இன்னும் சரியான முறையில் விவரங்களைக் கொடுத்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆலோசித்து எடுக்கப்படும்" என்று கூறினார்.

அடுத்த செய்தி